சிங்கப்பூரில் முதியோர் தவறாக நடத்தப்படுவது அதிகரித்து வரும் கவலையாக உள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் இந்நிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2022 ஆம் ஆண்டில், முதியோர் தவறாக நடத்தப்படுவது தொடர்பாக 370 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2021 இல் 338 ஆகவும் 2020 இல் 283 ஆகவும் இருந்தது.1 ஒரு முக்கிய காரணி என்னவென்றால் பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான மன அழுத்தம், குறிப்பாக பராமரிப்புக்காக அவர்களைச் சார்ந்திருக்கும் சிக்கலான தேவைகளைக் கொண்ட முதியவர்களைப் பராமரிப்பவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம்.
பராமரிப்புத் தேவைகள் அதிகரிக்கும்போது, பராமரிப்பாளர்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சோர்வடையக்கூடும், இது சில நேரங்களில் தற்செயலாக தீங்கை விளைவிக்கக்கூடும். தவறாக நடத்தப்படுவதன் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதும், அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதை அறிந்துகொள்வதும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் போன்று எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கு மிக முக்கியம்.
தவறாக நடத்தப்படுவதன் வகைகள், அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காண்பது, தவறாக நடத்தப்படுவதாக நீங்கள் சந்தேகித்தால் என்ன செய்வது என்பது பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.
தவறாக நடத்தப்படுவதன் வகைகள்
முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பில் தவறாக நடத்தப்படுவது என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு தீங்கு விளைவிப்பது அல்லது அவர்களைத் தவறாக நடத்துவதைக் குறிக்கிறது, இது பல்வேறு விதங்களில் நிகழலாம்:
1. உடல் ரீதியாக தவறாக நடத்துவது
இதில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரை அடிப்பது, தள்ளுவது அல்லது கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும்.
2. உணர்வு ரீதியாக தவறாக நடத்துவது
இதில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரிடம் ஆக்ரோஷமாக பேசுவது, அச்சுறுத்துவது, மிரட்டுவது அல்லது மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைப்பது உள்ளிட்டவை அடங்கும், இது அவர்களின் உணர்ச்சி ரீதியான நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும்.
3. அலட்சியம் மற்றும் சுய புறக்கணிப்பு
இதில் உணவு, உடை அல்லது மருத்துவ பராமரிப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறுவது உள்ளிட்டவை அடங்கும்.
4. நிதி ரீதியாக தவறாக நடத்துவது
இதில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் பணம் அல்லது சொத்துக்களைத் திருடுவது, அவரது சொத்துக்களை எழுதி கொடுக்குமாறு அல்லது சொத்து அதிகாரப் பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும்.
5. பாலியல் ரீதியாக தவறாக நடத்துவது
இதில் தேவையற்ற தொடுதல் அல்லது பாலியல் செயல்கள் உள்ளிட்டவை அடங்கும்.
முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பில் தவறாக நடத்தப்படுவதை அடையாளம் காணுதல்
தவறாக நடத்தப்படுவதை அடையாளம் காண்பது ஏன் முக்கியம்?
முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பில் தவறாக நடத்தப்படுவதை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிர்வினையாற்றுவது அவசியம், ஏனெனில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களால் பெரும்பாலும் தாங்கள் தவறாக நடத்தப்படுவதைப் பற்றித் தாங்களாகவே புகாரளிக்க முடியாது. பின்வரும் பல காரணிகளால் அவர்களால் புகாரளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது:
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இருக்கக்கூடிய அறிவாற்றல் குறைபாடு, தாங்கள் தவறாக நடத்தப்படுவதை அடையாளம் காண்பதை கடினமாக்கும். அவர்களுக்குத் தாங்கள் தவறாக நடத்தப்படுவதை அடையாளம் காணும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம் அல்லது அதை அவர்கள் தங்களின் இயல்பான பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதி என்று தவறாக நினைத்துக் கொள்ளலாம்.
ஏதோ தவறாக நடக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு இருந்தாலும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள சிரமப்படலாம். மொழித்திறன்கள் இன்மையும் அறிவு சார்ந்த சவால்களும், அவர்கள் தங்களின் துன்பங்களை வெளிப்படுத்துவதிலிருந்து அல்லது உதவியை நாடுவதிலிருந்து அவர்களைத் தடுக்கலாம்.
தவறாக நடத்தப்படுவதன் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
தவறாக நடத்தப்படுவதைக் குறிக்கக்கூடிய பொதுவான அடையாளங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு:
- சிராய்ப்புகள், வரிக்கோடுகள் அல்லது வடுக்கள் போன்ற விவரிக்கப்படாத காயங்கள், குறிப்பாக அவை உடலின் இருபுறமும் சீராகத் தோன்றுவது.
- உடைந்த எலும்புகள், சுளுக்குகள் அல்லது எலும்பு இடப்பெயர்வுகள்.
- அதிகப்படியான மருந்தளவு அல்லது சீரற்ற மருந்து பயன்பாடு பற்றிய புகார்கள்.
- உடைந்த கண்ணாடிகள் அல்லது ஃபிரேம்கள்.
- மணிக்கட்டுகளில் கயிறு அடையாளங்கள் போன்று கட்டுப்பாடுகளின் அடையாளங்கள்.
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருடன் தனிப்பட்ட சந்திப்புகளை அனுமதிக்க மறுக்கும் பராமரிப்பாளர்.
- பராமரிப்பாளரின் அச்சுறுத்தும், சிறுமைப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் நடத்தை.
- நடத்தையில் திடீர் மாற்றங்கள், விவரிக்க முடியாத பயம் அல்லது சந்தேக உணர்வுகளை வெளிப்படுத்துதல்.
- வழக்கத்திற்கு மாறான உடல் எடை இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, நீர்ச்சத்து இழப்பு.
- படுக்கைப் புண்கள் போன்று சிகிச்சையளிக்கப்படாத உடல் பிரச்சினைகள்.
- சுகாதாரமில்லா வாழ்க்கை நிலைமைகள்: அழுக்குடன் இருத்தல், பூச்சிகள், அழுக்கடைந்த படுக்கை மற்றும் உடைகள்.
- அழுக்காகவோ அல்லது குளிக்காமலோ விடப்படுதல்.
- வானிலைக்கு பொருந்தாத ஆடை அல்லது போர்வை.
- பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகள் (வெப்பம் அல்லது குழாய் நீர் இல்லாமல்; தவறான மின்சார வயரிங்; தீ விபத்து நேரும் விதமாக பிற ஆபத்துகள்).
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரை பொது இடத்தில் விட்டுச் செல்லுதல்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள், குறிப்பாக குறைவான குடும்ப ஆதரவுடன் தனியாக வசிப்பவர்கள், நிதி சுரண்டலுக்கு ஆளாக நேரிடும்.
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் கணக்குகளில் இருந்து கணிசமான அளவு பணம் எடுப்பது.
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் நிதி நிலையில் திடீர் மாற்றங்கள்.
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் வீட்டிலிருந்து பொருட்கள் அல்லது பணம் காணாமல் போவது.
- உயில்கள், சட்டப்பூர்வ அதிகாரப் பத்திரம், உரிமைகள் மற்றும் கொள்கைகளில் சந்தேகத்திற்கிடமான மாற்றங்கள்.
- முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்ட நபர் மேற்கொள்ள முடியாத நிதி நடவடிக்கைகள், கணக்கு வைத்திருப்பவர் படுக்கையில் இருக்கும்போது ஏடிஎம்மில் பணம் எடுப்பது போன்ற நடவடிக்கைகள்.
- தேவையற்ற சேவைகள், பொருட்கள் அல்லது சந்தாக்கள் நபரின் பில்களில் காணப்படுவது.
- மார்பகங்கள் அல்லது பிறப்புறுப்புகளைச் சுற்றி சிராய்ப்புகள்.
- காரணமில்லாமல் யோனி அல்லது ஆசனவாயில் இரத்தப்போக்கு.
- கிழிந்த, கறை படிந்த அல்லது இரத்தம் தோய்ந்த உள்ளாடை.
குறிப்பு: இந்தப் பகுதி தழுவி எடுக்கப்பட்டது: HelpGuide: Elder Abuse and Neglect.
முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பில் தவறாக நடத்தப்படுவதன் ஆபத்து காரணிகள்
எந்தவொரு பராமரிப்பு சூழ்நிலையிலும் தவறாக நடத்தப்படும் சூழல் ஏற்படலாம், ஆனால் சில காரணிகள் ஆபத்தை அதிகரிக்கக்கூடும். பொதுவான ஆபத்து காரணிகளில் அடங்குவன:
முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பில் அதிக கவனம் தேவை, இதனால் ஏற்படும் மன அழுத்தம் விரக்திக்கும், சில சமயங்களில் தவறாக நடத்தப்படுவதற்கும் வழிவகுக்கும்.
வான ஆதரவு அல்லது குறைவான வெளிப்புற உதவியுடன் பராமரிப்பாளர்களும் அவர்களின் அன்புக்குரியவரும் தனிமைப்படுத்தப்படலாம்.
மனச்சோர்வு அல்லது பிற நோயறிதல்கள் போன்று ஏற்கனவே இருக்கும் மனநல பிரச்சனைகள், மன அழுத்தத்தைச் சமாளிக்கும் பராமரிப்பாளரின் திறனைப் பாதிக்கலாம், இது பிறரை தவறாக நடத்துவதில் பங்களிக்கும்.
முதுமைக்கால மறதி நோய் வீரியம் அடையும்போது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருக்கு நடத்தை மாற்றங்கள் ஏற்படலாம், அதாவது அவரிடம் கிளர்ச்சி அதிகரிப்பு அல்லது கட்டுப்பாடு இன்மை போன்ற மாற்றங்கள் காணப்படலாம். இந்த மாற்றங்கள் பராமரிப்பாளர்களுக்கு சவாலானதாக இருக்கலாம், இதனால் அவர்கள் மன அழுத்தமாக உணரலாம் அல்லது உணர்ச்சிவசப்படலாம்.
வீட்டில் முன்பு குடும்ப வன்முறை நிகழ்ந்திருந்தால், அது பிறரை தவறாக நடத்தும் வாய்ப்பை அதிகரிக்கும்.
தவறாக நடத்தப்படுவதற்கு எதிர்வினையாற்றுதல்
தவறாக நடத்தப்படுவதாக நீங்கள் சந்தேகித்தால், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை அவசியம். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பின்வருமாறு:
உடனடி பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் உடனடி ஆபத்தில் இருந்தால், அவர்களை அந்தச் சூழ்நிலையிலிருந்து அகற்றி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவும். உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றால், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, சிறந்த நடவடிக்கையைத் தீர்மானிக்க சமூகப் பணியாளர்கள் அல்லது சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் போன்ற தொடர்புடைய நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவும்.
ஆவணப்படுத்தி, ஆதாரங்களை சேகரியுங்கள்
உடல் காயங்கள், நடத்தை மாற்றங்கள் அல்லது வாய்மொழி புகார்கள் உட்பட தவறாக நடத்தப்பட்டிருப்பதன் ஏதேனும் அறிகுறிகளை ஆவணப்படுத்தவும். ஏதேனும் சம்பவத்தின் விரிவான பதிவுகளையும் வைத்திருக்கவும், ஏனெனில் இது புகாரளிப்பதற்கு முக்கியமானதாக இருக்கும்.
தவறாக நடத்தப்படுவதை புகார் செய்யுங்கள்
தவறாக நடத்தப்படுவது குறித்த உங்கள் சந்தேகத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யவும். சிங்கப்பூரில், தேசிய வன்முறை எதிர்ப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் (NAVH) உதவி எண்ணை 1800-777-0000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இந்த 24 மணிநேர உதவி எண், ஆதரவை வழங்குகிறது மற்றும் பொருத்தமான சேவைகளுக்கு வழக்குகளை வகைப்படுத்துகிறது. உயிருக்கு ஆபத்தில்லாத அவசரநிலைகளுக்கு, FormSG இல் உள்ள NAVH புகார் படிவம் வழியாக இணையத்தில் தவறான நடத்தை குறித்து புகாரளிக்கலாம். நீங்கள் Office of the Public Guardian (OPG), அணுகலாம், இது தவறான நடத்தை அல்லது சுரண்டல் அபாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களைப் பாதுகாப்பதற்கான ஆதரவை இது வழங்குகிறது.
உயிருக்கோ பாதுகாப்பிற்கோ உடனடி ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், 999 என்ற எண்ணை அழைத்து உடனடியாக காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்கண்காணிப்பு மற்றும் ஆதரவு
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருக்குத் தகுந்த பராமரிப்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யவும். சமூகப் பணியாளர்கள், சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் அல்லது பிற நிபுணர்களுடன் இணைந்து நிலைமையைச் சரிசெய்து அவர்களுக்குத் தொடர்ச்சியாக பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யவும்.
சட்டத்தின் கீழ் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியோர் சட்டத்தைப் பார்வையிடலாம்.
முடிவுரை
முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பில் தவறாக நடத்துவது வயதானவர்கள் மட்டுமின்றி பலரையும் பாதிக்கிறது. வயதைப் பொருட்படுத்தாமல், அறிவாற்றல் குறைவை அனுபவிக்கும் எவரையும் இது பாதிக்கலாம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், மேலும் ஏதேனும் விதத்தில் அவர்களைத் தவறாக நடத்துவது அவர்களின் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நல்வாழ்வில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.
தொழில் வல்லுநர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூகமும் விழிப்புடன் இருப்பது அவசியம். தவறாக நடத்தப்படுவதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, உடனடியாக நடவடிக்கை எடுத்து, தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம், தவறாக நடத்தப்படுவதைத் தடுக்க நாம் உதவலாம். இவ்வாறு செய்வதன் மூலம், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் அவர்கள் பெறத் தகுதியுடைய மரியாதை, கவனிப்பு மற்றும் பாதுகாப்போடு நடத்தப்படுவதை நாம் உறுதி செய்யலாம்.
Tell us how we can improve?
- Straits Times. (2023, May 31). Slight rise in elder abuse cases; caregiver stress is a common factor behind abuse. The Straits Times. Retrieved from https://www.straitstimes.com/singapore/slight-rise-in-elder-abuse-cases-caregiver-stress-is-a-common-factor-behind-abuse
- HelpGuide. (n.d.). Elder abuse and neglect: Recognising and responding to elder abuse. HelpGuide.org. Retrieved from https://www.helpguide.org/aging/healthy-aging/elder-abuse-and-neglect
- Ministry of Social and Family Development. (n.d.). Protecting the vulnerable. Office of Public Guardian. Retrieved from https://www.msf.gov.sg/what-we-do/opg/safeguards/protecting-the-vulnerable

